இரண்டாவது இயேசு வந்து விட்டார் -1


இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அடையாளங்களுக்கு முற்றிலும் முரணானவற்றில் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கிற கிருஸ்தவகள், மனுஷ குமாரன் (கிருஸ்தவகளின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து) வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்திலுள்ள மேகங்களின் மேல் வந்திறங்குவார் என்றும், அப்போது பூமியிலுள்ளோர் யாவரும்அவரைக் கண்டு புலம்புவார்கள் என்றும், வேதாகமத்திலுள்ள சொற்களுக்கு மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டு பெரிய தவறிழைத்து வருகிறார்கள்.

கிருஸ்தவ சகோதரர்கள் பிரச்சாரம் செய்வதுபோல் மிகுந்த எக்காளத்தோடும், மிகுந்த வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் மனுஷ குமாரன் வானத்திலுருந்து எல்லோருடைய கண்களும் காணும்படி வெளிப்படையாக தோன்றுவதாக இருந்தால், அவர் எக்காளச் சத்தத்தோடு தமது தூதுவர்களை அனுப்புவதாக இருந்தால், இவ்வுலகில் உள்ள எந்த மனிதனும் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளாதிருக்க முடியாது. வானத்திலிருந்து மேகங்கள் சூழ மனுஷ குமாரன் இறங்கி வருவது யாருடைய கண்களுக்குத்தான் தெரியாமல் போகும்? அப்படி எவனாகிலும் ஒருவன் மனுஷ குமாரன் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தால் அவனை மானிடப்பிறவி என்று நாம் எவ்வாறு கூறமுடியும். 

இறைவன் கையாளும் வழிகள் இப்படிப்பட்டவை அல்ல, நல்லவர்களையும், தீயவர்களையும் பிரித்தறிவதற்காக இறைவன் சில ஒழுங்குமுறைகளை செய்திருக்கின்றான். அவற்றின்படி நல்லவர்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கெட்டவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள், நேர்மையாளர்களையும், நெறிதவறியவர்களையும் இவ்விதம் பிரிதரிந்தால் தான் (எல்லா வேத நூற்களிலும் சொல்லப்பட்டபடி) அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ கொடுக்கமுடியும். இவ்விதம் பிரித்தறியாவிட்டால், தண்டனை பெறுவோரும், வெகுமதியடைவோரும் ஒன்றாக அல்லவா கருதப்படவேண்டும்? அப்படியானால், ஒருவன் எத்தனையோ சங்கடங்களுக்கும், கஷ்டங்களுக்கும் உட்பட்டு தேடிய நற்கருமங்களுக்கு இறைவன் ஒரு பலனையும் தரமாட்டன் என்றும், ஒருவன் எப்படிப்பட்ட தீய வழியை பின்பற்றியிருந்தாலும், எத்தகைய கொடுமை இழைத்திருந்தாலும் அவனுக்கு எவ்வித தண்டனையும் கிடையாதென்றும் , மனுஷ குமாரன் வானத்திலிருந்து எக்காளமிட்டுக்கொண்டே தோன்றும் காலத்தில் இவ்விருசாராரையும் இறைவன் ஒன்றாகவே பாவிப்பான் என்றும் நாம் கூறவேண்டியதிருக்கும்.

மனுஷ குமாரன் இவ்விதம் பகிரங்கமாக எக்காளச் சப்தமிட்டு உலகத்தில் இருப்போர் அத்தனைபேரையும் தட்டி எழுப்பச் செய்வாரென்றும், அவர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டு மேகங்களிலிருந்து கீழே இறங்கி வருவார் என்றும் பிரசாரம் செய்யும் கிருஸ்தவர்கள் கீழ்க் கண்ட வேதாகம வாக்கியங்களை ஏன் மறந்துவிடுகிறார்கள்? என்பது நமக்கு விளங்கவில்லை.

"மனுஷ குமாரன் வரும் நாளையும், நாழிகையையும் நீங்கள் அறியாதிருக்கிற படியால் விழித்திருங்கள். (மத்தேயு 25:13)

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டு எஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை கண்காணிப்பான் என்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்: ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் ." (மத்தேயு 24:42-44)

"அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும் அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து..." (மத்தேயு 24:60)

இவ்வாக்கியங்களிளிருந்து ஒரு திருடனைப்போல் சப்தம் செய்யாமல் அமைதியாக வந்து சென்று விடுவாரென்றும், அவர் வருகின்ற நாளும் நாழிகையும் மக்களுக்கு தெரியாதென்றும் புலப்படுகின்றது.

"அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகிந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." (மத்தேயு 24:30) 

என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பது உண்மையே, நாம் முன்னர் கூறியபடி இந்த வாக்கியத்திலுள்ள ஆழிய கருத்தை ஆராய்ந்து உணராமல் ஆதிகால யூதர்கள் செய்தது போன்றே மேலெழுந்த வாரியான அர்த்தம் கற்பித்து உண்மையான கருத்தை கைநழுவ விட்டுவிட்டார்கள், நமது மதிப்பிற்குரிய சகோதரர்கள்.

யூதர்கள் ஒரு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை வைப்பதற்காக, முந்தைய வேதத்தில் சொல்லப்பட்ட படி ஒரு எலியாவை (இலியாஸ்) வானத்திலிருந்து எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தப்படி எலியா வானத்திலிருந்து இறங்கி வராமல் அவர்களுக்கு மத்தியிலேயே ஒரு சாதாரண மனிதனாக ஒரு யோவானாக தோன்றியதால், யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, கிறிஸ்து யூதர்களின் ராஜா வாகத் தோன்றுவார் என்று யூதர்கள் நம்பியிருந்தார்கள். ஆகவே ஒரு ஏழை நாசரேயனாகிய ஏசுவைக் கிறிஸ்துவாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .

இயேசு தம்மைக் 'கிறிஸ்து' வாக வாதிடும் காலத்தில் யூதர்கள் அவரை நோக்கி: "கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா வானத்திலிருந்து இறங்கி வர வேண்டுமே, அவர் இன்னும் வரவில்லையே என்று கேட்டதற்கு இயேசு கூறிய பதில் என்ன?

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா தோன்றுவார் என்பது உண்மையே. ஆனால் எலியா தோன்றிவிட்டார். யோவான் தான் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா என்று இயேசு கிறிஸ்து அவர்களிடம் கூறிவிடவில்லையா?

இதன்படி, யூதர்கள் எண்ணி இருந்ததைப்போல, எலியா வானத்திலிருந்து ஒருபோதும் தோன்றமாட்டார் என்பதும் எலியாவின் ஆவியிலும் பலத்திலும் மற்றொருவரே தோன்றுவார் என்பதும், அந்த மற்றொருவர் யோவானே என்பதும் நிரூபணம் ஆகிவிடவில்லையா? இயேசு கிறிஸ்து இப்படி கூறியதால் முந்திய வேதங்களிலுள்ள வாக்கியங்கள் பொய்யாகி போய்விட்டனவா? இல்லையே! பின்னர் யூதர்கள் ஏன் இயேசுவின் சொற்களை ஏற்றுக்கொள்ளாமல், எலியா இன்னும் வானத்திலிருந்து தோன்றவில்லை, ஆகவே கிறிஸ்து என்று வாதிடும் இந்த இயேசு ஒரு கள்ள தீர்க்கதரிசி தான் என்று முடிவு செய்து அவரை சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாக்க விரும்பி, சிலுவையில் அறைந்து கொடுமை செய்தார்கள்?

"இவ்வளவு பெரிய கொடுமையையும், தவற்றையும் யூதர்கள் செய்ததற்கு காரணம் என்ன ஒரேஒரு காரணம்தானே!

வேத வாக்கியங்களை அப்படியப்படியே மேலெழுந்த வாரியாக அவற்றின் சொற்பொருள்படி யூதர்கள் பின்பற்றினார்கள்; அவ்வாகியங்களில் பொதிந்துள்ள கருத்தை அவற்றில் சொல்லப்பட்ட விசயங்களை பின்பற்றவில்லை. யூதர்கள் எலியா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் இளைத்த துண்பம்களுக்கெல்லாம் இதுதான் மூல காரணம். வேத வாக்கியங்களில் நிறைந்துள்ள வார்த்தைகளை யூதர்கள் பின்பற்றினார்கள்: அவற்றின் அடியிலுள்ள விஷயத்தை விட்டுவிட்டார்கள். கிருஸ்தவர்கள் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் வேதாகமத்திலேயே இப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது. பிறகு எவ்வாறு கிறிஸ்தவர்களால் இதனை மறுத்துக் கூறமுடியும்?

எப்படியிருப்பினும், அப்பலங்கால யூதர்கள் செய்த தவற்றையே அறிவியல் அறிவு மிகுந்த இக்காலத்தில்- கல்வி அறிவு நிறையப்பெற்ற கிருஸ்தவ சகோதரர்களும் செய்து வருவது விந்தயில்லையா? மனுஷ குமாரன் மேகங்களிலிருந்து பூமியில் வந்திறங்குவார் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதால், வானத்திலிருந்து இறங்கிவரக்கூடிய ஒரு மனுஷ குமாரனையே இவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

கிறிஸ்து தோன்றும் முன்னர், எலியா, தோன்றுவார் என்று முந்தய வேத நூற்களில் சொல்லப்பட்டிருந்தும் மரணித்துப்போன அதே பழைய எலியாதான் உயிரோடு மீண்டும் யூதர்களுக்கிடையில் தோன்றினாரா? அல்லது இயேசு கிறிஸ்துதான் அந்த மூடக் கருத்தை ஆதரித்தாரா? இரண்டும் இல்லை. மரணித்துப்போன எலியா மீண்டும் தோன்றுவாரென்றால், எலியாவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்றுதான் பொருள் என இயேசு கிருஸ்துவே விளக்கிக் கூறி யூதர்களின் அறிவிற்கு புறம்பான நம்பிக்கையை இடித்துரைக்கவில்லையா?

அப்படியானால், இயேசு இரண்டாம் முறையாகத் தோன்றுவாரென்று கிருஸ்தவர்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தால், அவர்கள் வானத்தை ஏன் ஏறிட்டு பார்த்து கொண்டிருக்கவேண்டும்? இயேசு மீண்டும் வருவார் என்பதன் பொருள் இயேசுவின் வல்லமையையும் இயேசுவின் கருத்தையும் கொண்ட அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்பதுதானே பொருள்?

இயேசுவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் ஏற்கனவே தோன்றிவிட்டார். அவரே பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்னும் கிராமத்தில் பிறந்த ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள்! இவருடைய வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகைபற்றிய தீர்க்க தரிசனம் நிறைவேறிவிட்டது.

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றி, அதாவது மனுஷ குமாரனுடைய வருகையைப்பற்றி சொல்லப்பட்ட அடையாளங்கள் யாவும் ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் வருகையின் போது தவறாமல் நிறைவேறிவிட்டன. சில ஆதாரங்களை கீழே காண்போம்.

"அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்த காரப்படும், சந்திரன் ஒளியை கொடாதிருக்கும். நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் தத்துவங்கள் அசைக்கப்படும்." (மத்தேயு 24:29)

இயேசுவின் இரண்டாவது வருகைக்குரிய காலம் கி.பி 1873-ல் தொடங்குகிறது என்று கிருஸ்தவ வல்லுனர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். தமது வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகை நிறைவேறிவிட்டது என்று வாதிடும் வாக்களிக்கப்பட்ட மெசாயா ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு, இறைவனிடமிருந்து (revelation) வெளிப்பாடு கிடைத்தது. இந்த ஆண்டிலேயே என்பது குறிப்பிட தக்கது.

மனித குமாரன் தோன்றும் போது சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியை தராது, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிரும் என்று வேதாகமத்தில் கூறப்பட்டபடி, சூரிய சந்திர கிரகணங்கள் இவ்வுலகே பிரமிக்கத்தக்க அளவில் நடந்தேறின, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன. கி.பி. 1894 ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் வெள்ளிகிழமை அன்று சூரிய கிரகணமும், கி.பி. 1894-ம ஆண்டு மார்ச்சு மாதம் இருபத்து ஒன்னாம் நாள் வியாழக்கிழமை அன்று சந்திர கிரகணம் உண்டாயின. வாக்களிக்கப்பட்ட மெசாயா தோன்றும் காலத்திற்கு அடையாளமாக ஒரு ரமலான் மாதத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு தீர்க்க தரிசனத்தின் மூலமாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அதற்கேற்பவே, நாம் மேலே குறிப்பிட்ட சூரிய சந்திர கிரகணங்கள் ஒரு ரமலான் மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தேறின. உலகம் தோன்றிய நாள் முதலாக இப்படிப்பட்ட சூரிய சந்திர கிரகண நிகழ்ச்சிகள். ஒரு மாத காலத்திற்குள் நடைபெற்றதே இல்லை என வானவியல் ஆராட்சியாளர்கள் அத்தாட்சி பகருகின்றனர். வாகளிக்கப்பட்ட மெசாயாவாகிய ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் உண்மையை வலியுறுத்த இறைவன் எத்தகைய பலமிக்க அத்தாட்சிகளை அருளியிருக்கின்றான்.

ஹாம்ஸ்வொர்த் சர்வதேச கலைக்களஞ்சியத்தில் கி.பி. 1872, 1885, 1892 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன என்ற உண்மை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெற்றதைப் போன்றே, மனுஷ குமாரன் வரும் காலத்தில் மற்றொரு அடையாளமாகிய நட்சத்திரங்கள் உதிர்வதும் பிசகாமல் நடந்தேறிவிட்டது. உண்மையை உணர்ந்து, அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவற்றைப்போன்ற இவற்றைப் போன்ற அத்தாட்சிகள் எத்தனை எத்தனையோ!

வலுவாய் தொனிக்கும் எக்காளச் சத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தில் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பார்கள். (மத்தேயு 24:31)

ஹஸ்ரத் அஹ்மத் அவர்களுடையா தூதர்கள் உலகத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று பலம் பொருந்திய இஸ்லாத்தின் போதனைகளை பிரச்சாரம் செய்து, இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை நான்கு திசைகளிலிருந்தும் ஒன்று திரட்டினார்கள் என்ற உண்மையை உணர்வோர் எவரும் மேற்கண்ட தீர்க்கதரிசனம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடத்தில் முழுமையாக நிறைவேறி விட்டதைகண்டு கொள்வர். இவ்வுலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அஹ்மதியா பிரச்சார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.